சீனாவில் கொரோனா பரவல்; 3 நகரங்களில் முழு ஊரடங்கு

கொரோனா பரவல் காரணமாக சீனாவில் இதுவரை 3 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-01-12 08:46 GMT
பீஜிங்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த ஒரிரு மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சீனாவின் ஷியான் மற்றும் யூசோவ் ஆகிய 2 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3-வதாக அன்யாங் என்ற நகரத்திலும் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சினாவில் வரும் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், தற்போது அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை விரைவில் கட்டுப்படுத்தி நாட்டின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் சீன அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்