பாகிஸ்தானில் அரசு சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்க அவசர சட்டம் - மந்திரி சபை ஒப்புதல்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அரசு சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்கும் அவசர சட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.;

Update:2022-07-25 06:20 IST

இஸ்லாமாபாத்,


அன்னியச் செலாவணி கையிருப்பு சரிவு, விலைவாசி உயர்வு, டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்றவற்றால் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் அன்னிய கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.

சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்குவதாக தெரிவித்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு சில நிபந்தனைகளை நிறைவேற்றாததால் சர்வதேச நிதியம் பணம் வழங்கவில்லை.

ஏப்ரல் மாதம் இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய சோதனையாக உள்ளது. இலங்கையை போல, பாகிஸ்தான் திவால் நிலைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்ளார்.

இந்த நிலையில் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசின் சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களின் பங்குகளையும், பிற அசையா சொத்துகளையும் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பிற நாடுகளுக்கு விற்பனை செய்வது தொடர்பாக, அரசுகளுக்கிடையேயான வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான அமைச்சகத்தால் இந்த சட்டம் முன்மொழியப்பட்டது.

இந்த அவசர சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், நாடாளுமன்ற ஒப்புதலுக்கு பிறகு அதிபரின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த அவசர சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் அரசு நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் பங்குகளை வெளிநாடுகளுக்கு விற்பதற்கு எதிரான மனுகளை கோர்ட்டுகளால் விசாரிக்க முடியாது. அதே சமயம் மந்திரி சபையின் அனுமதியின்றி எந்தவொரு சொத்தும் விற்கப்படாது என அரசு உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில் அரசின் சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்கும் அவசர சட்டத்துக்கு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாட்டின் சொத்துகளை திருடர்கள் விற்க அனுமதிக்கக்கூடாது என அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்க சதி மூலம் பதவிக்கு வந்த 'குற்ற மந்திரி' (பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை இப்படி குறிப்பிடுகிறார்) தலைமையிலான அரசாங்கம் எப்படி தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதில் நம்பிக்கை வைக்க முடியும்.

கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானை கொள்ளையடித்து வந்த இவர்கள்தான் நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். இந்த திருடர்கள் நமது தேசிய சொத்துகளை வஞ்சகமான முறையில் விற்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்