நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து: பாஜக எம்.எல்.ஏவுக்கு பாகிஸ்தான் கண்டனம்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியதால் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-08-24 10:13 GMT

இஸ்லமாபாத்,

தெலுங்கானா மாநிலம், கோஷமகால் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா சிங் (வயது 45) ஆவார். இவர் இஸ்லாமிய மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி, பல வழக்குகளில் சிக்கியுள்ளார். இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் மேடை நகைச்சுவை கலைஞர் முனவர் பரூக்கி நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியை விமர்சித்து, நபிகள் நாயகத்தை குறிப்பிட்டு ஒரு வீடியோவை யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தார்.

இவரது சர்ச்சை கருத்துக்காக ஐதராபாத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவரை கைது செய்யுமாறு கோரிக்கைகள் வலுத்தன. அதைத் தொடர்ந்து ராஜா சிங்கை போலீசார் அவரது இல்லத்தில் வைத்து நேற்று காலை கைது செய்தனர். நபிகள் நாயகம் மீது சர்ச்சைக்குரிய கருத்து கூறிய விவகாரத்தில் எம்.எல்.ஏ. ராஜா சிங்கை பா.ஜ.க. வில் இருந்து இடைநீக்கம் செய்து கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவின் கருத்து பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளையும் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் கடுமையாக காயப்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக பாஜக தலைவர்கள் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏவுக்கு எதிராக எடுக்கப்பட்ட இடைநீக்க நடவ்டிக்கை இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வலியையும் வேதனையையும் தணிப்பதாக இல்லை" என்று தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்