மாமல்லபுரத்தில் தலசயன பெருமாள் கோவில் கருடசேவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

மாமல்லபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகோத்சவ தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தலசயன பெருமாள் கோவில் கருடசேவையில் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

Update: 2019-02-04 22:45 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 108 வைணவ தலங்களில் 63-வது தலமாக உள்ள தலசயன பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பெருமாள் கடற்கரையில் எழுந்தருளும் மகோத்சவ புனித நீராடல் விழா நடைபெற்றது.

இந்த புனித நீராடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கடலில் நீராடினால், நோய்கள் தீர்ந்து, நன்மைகள் பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அங்கு கருட சேவையில் அருள்பாலித்த தலசயன பெருமாள், ஆதிவராக பெருமாள், பூதத்தாழ்வாரை பக்தியோடு வணங்கி வழிபட்டனர்.

பிறகு சக்கரத்தாழ்வாருக்கு கடல் நீரால் அபிஷேகம் நடந்து முடிந்தவுடன், பக்தர் கள் கடலில் புனித நீராடினர்.

இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மாமல்லபுரம் கடற்கரையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், கோவில் செயல் அலுவலர்கள் வெங்கடேசன், குமரன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாடுகளை மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் நிர்வாக அதிகாரி எஸ்.சங்கர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்