ஐ.பி.எல். போட்டியில் இருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்

ஐ.பி.எல். போட்டியில் இருந்து வருண் சக்ரவர்த்தி விலகினார்.

Update: 2019-05-01 22:45 GMT
புதுடெல்லி,

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கடந்த மாத தொடக்கத்தில் பயிற்சியின் போது விரலில் காயமடைந்தார். காயத்துக்கு சிகிச்சை பெற்ற அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் காயத்தில் இருந்து மீண்டு வராததால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நேற்று விலகினார்.

அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்த வருண் சக்ரவர்த்தி ஆச்சரியப்படும் வகையில் ரூ.8.4 கோடிக்கு ஏலம் போனார். கொல்கத்தாவுக்கு எதிரான ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் களம் இறங்கிய அவர் 3 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இதில் அவரது அறிமுக ஓவரில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் 25 ரன்கள் விளாசி மிரள வைத்தனர். சுழற்பந்து வீச்சில் 7 விதமாக வீசக்கூடியவர் என்று வர்ணிக்கப்பட்ட 27 வயதான வருண் சக்ரவர்த்திக்கு இந்த ஐ.பி.எல். தொடர் பரிதாபகரமாக அமைந்து விட்டது.

மேலும் செய்திகள்