ஐதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக பெய்லிஸ் நியமனம்

ஐதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக பெய்லிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-07-18 23:36 GMT
புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் 8 அணிகளில் ஒன்றான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அவரது பயிற்சியின் கீழ் அந்த அணி 2016-ம் ஆண்டில் சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த ஆண்டில் ஐதராபாத் அணி 4-வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து பரஸ்பர பேச்சுவார்த்தை அடிப்படையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டாம் மூடி விலகி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரேவோர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆவார். ஆஷஸ் தொடர் நிறைவடைந்ததும் இங்கிலாந்து அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது.

பெய்லிசின் பயிற்சியின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. பிக்பாஷ் கிரிக்கெட்டில் சிட்னி சிக்சர்ஸ் அணி வாகை சூடியது. அவரது வெற்றிகரமான பயணம் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியையும் முன்னெடுத்து செல்லும் என்று நம்புவதாக ஐதராபாத் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்