பெங்களூரு அபார வெற்றி: பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த பஞ்சாப் கிங்ஸ்

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.

Update: 2024-05-09 18:15 GMT

தர்மசாலா,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்களும், ரஜத் படிதார் 55 ரன்களும் குவித்தனர். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிலீ ரோசோவ் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். ஆனால் மறுபுறம் பேர்ஸ்டோவ் 27 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதிரடியாக விளையாடிய ரோசோவ் 27 பந்துகளில் 61 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களில் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷசாங்க் சிங் 37 ரன்களில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் டக் அவுட்டிலும், கேப்டன் சாம் கர்ரண் 22 ரன்களிலும், அசுதோஷ் சர்மா 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

வெறும் 17 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பஞ்சாப் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ரோசோவ் 61 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

12 போட்டிகளில் விளையாடி 8-வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்சை தொடர்ந்து நடப்பு தொடரில் 2-வது அணியாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Tags:    

மேலும் செய்திகள்