எம்.எஸ். தோனி விஷயத்தில் சி.எஸ்.கே. தோல்வி - ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் விமர்சனம்

எம்.எஸ். தோனி விஷயத்தில் சி.எஸ்.கே. தோல்வியடைந்துள்ளதாக ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் விமர்சித்துள்ளது.

Update: 2024-04-21 09:05 GMT

image courtesy: facebook/ Chennai Super Kings

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து விளையாடி வருகிறது. இம்முறை வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்.எஸ்.தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். இருப்பினும் அவரை பார்ப்பதற்கு ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ். தோனி நடப்பு சீசனில் டெல்லிக்கு எதிராக 36 (17 பந்துகள்) ரன்கள் அடித்து அசத்தினார். அதை விட மும்பைக்கு எதிராக கடைசி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் சி.எஸ்.கே. வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்திலும் கடைசி 2 ஓவரில் களமிறங்கிய அவர் 28 (9 பந்துகள்) ரன்களை அடித்து அற்புதமான பினிஷிங் கொடுத்தார். 

இப்படி தோனியின் அசத்தலான ஆட்டம் அதிரடியாக இருக்கும் வேளையில் அவரை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் தோனி முன்கூட்டியே களமிறங்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சி.எஸ்.கே. அணியின் இந்த செயல் குறித்து ட்வீட் செய்துள்ள ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு தோனியை முன் வரிசையில் களமிறக்குவதில் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது என்று விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

"எம்.எஸ். தோனி எங்களது அணிக்காக விளையாடியிருந்தால் அவரைப் போன்ற வீரரை நாங்கள் எட்டாவது இடத்திற்கு முன்னதாகவே களம் இறக்குவோம். இளம் வீரர் போன்று இன்றளவும் அதிரடியாக ஆடும் அவரை சரியாக பயன்படுத்த, சி.எஸ்.கே அணிக்கு தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்