கவலைப்படாதீர்கள் அர்ஷ்தீப், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் - முகமது ஷமி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அர்ஷ்தீப் சிங்குக்கு தனது ஆதரவை கூறியுள்ளார்.

Update: 2022-09-06 09:18 GMT

துபாய்,

ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் பரபரப்பான கட்டத்தில் 18-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது, தான் ஆசிப் அலி களமிறங்கி இருந்தார். அவர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் (0 ரன்) இருந்தார். அப்போது, ரவி பிஷ்னோய் வீசிய 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். அப்போது, பேட்டில் சரியாக படாததால் பந்து கீப்பருக்கு பின்னே கேட்ச் வாய்ப்பாக மாறியது.

அங்கு நின்றுகொண்டிருந்த அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டார். ஆனால், மிகவும் சுலபமான அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். அந்த கேட்ச் தவறவிடப்பட்டது இந்தியா தோல்வியடைய முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக பலரும் கடுமையான விமர்சனங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட ஏராளமானோர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஹர்பஜன் சிங் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் உட்பட ஏராளமானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் அர்ஷ்தீப் சிங்குக்கு தனது ஆதரவை கூறியுள்ளார். ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

கவலைப் படாதீர்கள் அர்ஷ்தீப் சிங் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். விமர்சனங்களை ஒதுக்கி வைத்து விட்டு அடுத்து வர கூடிய போட்டிகளில் கவனம் செலுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்