இதையெல்லாம் எம்.எஸ்.தோனியால் கூட கற்றுத்தர முடியாது - ஹர்திக் பாண்ட்யா

தோல்விகள்தான் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுக்கும் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-06 11:02 GMT

image courtesy:AFP

மும்பை,

ஐ.பி.எல். வரலாற்றில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் புதிய கேப்டன் பாண்ட்யா தலைமையில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்த அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதனையடுத்து அந்த அணி தனது 12-வது லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. மும்பையின் இந்த தோல்விகளுக்கு பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் கேப்டனாகவும் சொதப்பலான முடிவுகளை எடுத்த ஹர்திக் பாண்ட்யாதான் முக்கிய காரணம் என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் இது போன்ற தோல்விகள்தான் மிகப்பெரிய பாடத்தை கொடுக்கும் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். அதை எம்.எஸ். தோனி போன்ற தனது ரோல் மாடலால் கூட சொல்லிக் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கும் பாண்ட்யா இது பற்றி பேசியது பின்வருமாறு:-

" நான் எப்போதும் பொறுப்பை விரும்பும் ஒருவனாக இருக்கிறேன். என்னைப்பொறுத்த வரை இந்த தோல்விகள் என் தவறுகளை சுட்டிக் காண்பித்து அதில் உள்ள பாடங்களை கற்பதற்கான வாய்ப்பை பற்றியதாகும். அந்த அனுபவத்தை யாராலும் உங்களுக்கு கற்பிக்க முடியாது. உங்கள் நெருங்கிய உதவியாளர் அல்லது ரோல் மாடல் அல்லது மஹி பாய் (எம்.எஸ்.தோனி) போன்றவரால் கூட கற்றுத்தர முடியாது. எனவே சில தோல்விகளை வைத்து உங்களால் அனுபவ பாடத்தை கற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் தோல்விகள் கிடைக்கும்போதுதான் உங்களுடைய வேலை என்ன? நம்மால் எதில் சிறப்பாக செயல்பட முடியும்? என்பதை தெரிந்து கொள்ள முடியும்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்