3 நாட்கள் படுக்கையில் இருந்தேன், வலி நிவாரணி மருந்துகளை எடுத்து கொண்டேன் - ரியான் பராக்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Update: 2024-03-29 03:54 GMT

Image Courtesy: @IPL / @ParagRiyan

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடந்த 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து மோசமாக செயல்பட்டு வந்த அவர் கிண்டல்களுக்கு உள்ளானார்.

இருப்பினும் இந்த வருடம் பேட்டிங் வரிசையில் 4-வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவர் முதல் போட்டியில் 43 ரன்கள் அடித்தார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 84 ரன்கள் எடுத்ததுடன் ஆட்டநாயகன் விருது வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆட்டநாயகன் விருது பெற்ற ரியான் பராக் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த மூன்று நாட்களாக நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. கடந்த 3 நாட்களாக நான் படுக்கையில் இருந்தேன், வலி நிவாரணி மருந்துகளை எடுத்து கொண்டேன். அதை எல்லாம் கடந்து இன்று (நேற்று) என்னால் சிறப்பாக செயல்பட முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னைப் பற்றிய எனது கருத்து என்னவென்று எனக்குத் தெரியும். யார் என்ன சொன்னாலும் நான் அதை மாற்ற அனுமதிக்க மாட்டேன். இந்த வருடம் எனக்கு எனக்கு உள்ளூர் தொடர் அபாரமானதாக அமைந்தது. அது தற்போது உதவுகிறது. சில நேரங்களில் டாப் 4 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் 20 ஓவர்களும் விளையாட வேண்டும். பிட்ச்சில் பந்து மெதுவாக நின்று வந்தது. கடந்த போட்டியில் சஞ்சு பையா அப்படி விளையாடினார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்