ஐ.பி.எல். : சொந்த அணியை தொடங்குகிறாரா தோனி? பேஸ்புக் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

எம்.எஸ். தோனியின் பேஸ்புக் பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2024-05-24 07:37 GMT

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய தோனி 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். 42 வயதான அவர் நடப்பு சீசன் தொடங்கும் முன்பு சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார்.

இறுதி கட்டத்தில் மட்டும் பேட்டிங் செய்ய களம் இறங்கிய தோனி அதிரடியாக விளையாடியதுடன் மொத்தம் 161 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 220.50 ஆகும். இருப்பினும் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

இந்த ஐபிஎல் சீசன்தான் தோனியின் கடைசி தொடர் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை தோனியிடம் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் எம்.எஸ். தோனி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், " பாய்வதற்கான நேரம் இது. முக்கியமானதை செய்ய வேண்டிய நேரம் இது. நான் எனது சொந்த அணியைத் தொடங்குகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் ஐ.பி.எல்.-ல் தோனி சொந்த அணியை தொடங்க உள்ளாரா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இருப்பினும் எம்.எஸ். தோனி பதிவிட்டுள்ள இந்த பதிவு பிரபல ஆட்டொமொபைல் நிறுவனமான சிட்ரோயனுக்கு விளம்பரமாக இருக்கலாம் என்று கருத்துகள் நிலவுகின்றன. ஏனெனில் அந்த நிறுவனத்தின் பெயரை இந்த பதிவுடன் டேக் செய்து பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்