இப்போதும் ஒரு பேட்ஸ்மேனாக முன்னேறுவதை லட்சியமாக கொண்டிருக்கிறேன் - விராட் கோலி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Update: 2024-05-09 22:43 GMT

தர்மசாலா,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 47 பந்துகளில் 6 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்களை விளாசினார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ரோசோவ் 27 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். பெங்களூரு அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பவ்னில் சிங், பெர்குசன் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றிக்கு 92 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இனிமேல் தொடர்ந்து அணிக்காகவும் தமக்காகவும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட உள்ளதாக தெரிவித்த விராட் கோலி இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"என்னை பொறுத்த வரை இப்போதும் எண்ணிக்கையை விட தரமே முக்கியம். அது நன்றாக வேலை செய்கிறது. கடந்த காலங்களில் செய்ததை நான் மீண்டும் செய்ய முயற்சிக்கிறேன். இப்போதும் ஒரு பேட்ஸ்மேனாக நான் முன்னேறுவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன். ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் அடிக்கிறேன். அதை நான் பயிற்சி செய்யவில்லை. ஆனால் கடந்த காலங்களில் அடித்துள்ளேன் என்பது எனக்கு தெரியும். நான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது தெரியும். அதற்கு கொஞ்சம் நம்பிக்கை தேவை.

எனக்கும் அணிக்கும் ஸ்ட்ரைக் ரேட்டை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன். நமக்கு நாமே நேர்மையாக இருப்பதுதான் போட்டியில் முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி. ஆரம்பத்தில் எங்களுக்கு தோல்விகள் இருந்தன. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி மிகவும் நெருக்கமாக சென்றது. எனவே இந்த வெற்றிகளால் எங்களுடைய தன்னம்பிக்கை திரும்பியுள்ளது. அதனால் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்