டி20 உலகக்கோப்பை: துபே தேர்வு செய்யப்பட வேண்டும்... விராட் கோலியிடம் அந்த திறமை இருக்கு - கங்குலி

துபே போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-22 16:20 GMT

புதுடெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலி 40 பந்தில் 100 ரன்கள் குவிக்கும் திறமையுடையவர் என சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளார். எனவே 2024 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுடன் அவர் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்றும் கங்குலி ஆலோசனை தெரிவித்துள்ளார். அத்துடன் அதிரடியான சிக்சர்களைப் பறக்க விடக்கூடிய சிவம் துபே போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இந்தியாவுக்காக பயமின்றி விளையாடுவது முக்கியமாகும். டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரர்கள்தான் விளையாட வேண்டும் என்ற எந்த விதிமுறையும் கிடையாது. ஜேம்ஸ் ஆண்டர்சன் இப்போதும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 ஓவர்கள் வீசுகிறார். எம்.எஸ். தோனி 40 வயதிலும் சிக்சர்கள் அடிக்கிறார். விராட் கோலியிடம் 40 பந்துகளில் சதமடிக்கும் திறமை இருக்கிறது. எனவே டி20 கிரிக்கெட்டில் வெற்றி என்பது பயமின்றி சுதந்திரமாக விளையாடுவதை பொறுத்ததாகும்.

இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓப்பனிங்கில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். இந்தியா களத்திற்கு சென்று அடிக்க வேண்டும். ரோகித், விராட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா போன்றவர்கள் அற்புதமான திறமையும் சிக்சர்கள் அடிக்கும் தன்மையையும் கொண்டவர்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்