ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Update: 2024-04-22 17:27 GMT

image courtesy: IndianPremierLeague twitter

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் 6 ரன்களில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 0 மற்றும் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களிலும் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய முகமது நபி சிறிது நேரம் அதிரடி காட்டிய நிலையில் 23 ரன்களில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த திலக் வர்மா - நேஹால் வதேரா இணை அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் அதிரடியாகவும் விளையாடி ரன்களை குவித்தது. இவர்களில் திலக் வர்மா அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் வதேரா 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து திலக் வர்மா 65 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை குவித்தார். ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இந்த நிலையில் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 31 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது மழை நின்றதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்