விஜய் ஹசாரே டிராபி; தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 103 ரன்கள் குவித்தார்.;

Update:2023-12-11 18:01 IST

image courtesy; Twitter

ராஜ்கோட்,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் மற்றும் முதன்மை காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அரியானா, பெங்கால், ராஜஸ்தான், கேரளா, விதர்பா, கர்நாடகா, மும்பை, தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் 4வது காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தமிழக வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரசாத் பவார் 59 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டுகளும், சித்தார்த், அபராஜித் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி பாபா இந்திரஜித்தின் சதத்தின் உதவியுடன் 43.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 229 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 103 ரன்கள் குவித்தார். மும்பை அணி தரப்பில் மோஹித் அவஸ்தி, ராய்ஸ்டன் டயஸ், தனுஷ் கோட்டியான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்