கையில் இருந்த போட்டியை நாங்கள் இங்கு தவற விட்டு உள்ளோம் - சஞ்சு சாம்சன்

இந்த போட்டியில் நாங்கள் எங்கு தோற்றோம் என்பதை கண்டறிந்து அந்தக் குறையை போக்கி அடுத்த போட்டியில் பலமாக திரும்ப வருவோம் என கூறியுள்ளார்.

Update: 2024-05-08 12:24 GMT

Image Courtesy: AFP

டெல்லி,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரேல் 65 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 4 ஓவரில் 25 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது, கையில் இருந்த போட்டியை நாங்கள் இங்கு தவற விட்டு உள்ளோம். இந்த மைதானத்தில் 11 முதல் 12 ரன்கள் வரை ஒரு ஓவருக்கு அடிக்க முடியும். ஆனாலும் இறுதியில் நாங்கள் இலக்கை எட்டாமல் தோல்வியை சந்தித்ததில் வருத்தம் இருக்கிறது.

இந்த மைதானத்தில் முதலில் நாங்கள் 10 ரன்கள் வரை கூடுதலாக வழங்கி விட்டோம். நிச்சயம் 210 ரன்கள் வரை துரத்தி இருக்க முடியும். டெல்லி முதலில் பேட்டிங் செய்யும்போது ப்ரேசர் மெக்கர்க் ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர்களுக்கு நல்ல அடித்தளம் அமைந்துவிட்டது. இந்த தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இருப்பினும் நாங்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டதாக நினைக்கிறோம். சந்தீப் சர்மா மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டியில் நாங்கள் எங்கு தோற்றோம் என்பதை கண்டறிந்து அந்தக் குறையை போக்கி அடுத்த போட்டியில் பலமாக திரும்ப வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்