உலக கோப்பை ஆக்கி போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி முதல்முறையாக சாம்பியன்

உலக கோப்பை ஆக்கி போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Update: 2018-12-16 22:45 GMT
புவனேஸ்வரம்,

14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் கடந்த 3 வார காலமாக நடந்து வந்தது. இதில் நேற்றிரவு நடந்த மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நெதர்லாந்து அணி, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியான பெல்ஜியத்தை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றது. இதில் நெதர்லாந்து தங்களது 5 வாய்ப்பில் 2-ஐ மட்டுமே கோலாக்கியது. பெல்ஜியம் அணி தங்களது முதல் 4 வாய்ப்பில் 2-ஐ கோலாக்கிய நிலையில், கடைசி வாய்ப்பை ஆர்தர் டி ஸ்லோவர் கோலாக மாற்றினார். அவர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் குதிக்க, நெதர்லாந்து தரப்பில் அது சரியான கோல் அல்ல என்று அப்பீல் செய்யப்பட்டது. டி.வி. ரீப்ளேயில் ஆர்தரின் காலில் பந்து லேசாக பட்ட பிறகே வலைக்குள் செல்வது தெரியவந்தது. இதனால் அது கோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை நீடித்தது.

இதைத் தொடர்ந்து ‘சடன்டெத்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் முதல் வாய்ப்பை பெல்ஜியம் வீரர் புளோரென்ட் வான் ஆவ்பெல் கோலாக்கினார். பின்னர் நெதர்லாந்து வீரர் ஜெரோன் ஹெட்ஸ்பெர்ஜர் பந்துடன் இலக்கை நோக்கி முன்னேறிய போது அவரது முயற்சியை பெல்ஜியம் கோல் கீப்பர் வின்சென்ட் வனாஸ்ச் முறியடித்து வெற்றியை உறுதி செய்தார்.

பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து, உலக கோப்பையை கையில் ஏந்தியது. 47 ஆண்டு கால உலக கோப்பை ஆக்கி வரலாற்றில் பெல்ஜியம் அணி சாம்பியன் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி இறுதி ஆட்டத்தில் தோற்பது இது 3-வது முறையாகும்.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை பந்தாடி, வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது.

மேலும் செய்திகள்