பிரிமியர் பேட்மிண்டன் லீக்: ஐதராபாத் அணி வெற்றி

8 அணிகள் இடையிலான பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2017-12-25 19:31 GMT
கவுகாத்தி,

8 அணிகள் இடையிலான பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு கவுகாத்தியில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி 5-2 என்ற புள்ளி கணக்கில் அறிமுக அணியான நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சை தோற்கடித்தது. இதில் ஒற்றையர் ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்காக களம் இறங்கிய ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் 15-9, 15-11 என்ற செட் கணக்கில் வாரியர்ஸ் வீராங்கனை மிட்செலி லீயை வீழ்த்தியதும் அடங்கும்.

ஸ்பெயினை சேர்ந்த கரோலினா மரினிடம், ‘உங்களது கடினமான எதிராளி பி.வி.சிந்துவா அல்லது சாய்னாவா? என்று கேட்ட போது, ‘எனக்கு நானே சவாலான எதிராளி’ என்று பதில் அளித்தார். மேலும் அவர், ‘சாய்னா, சிந்து இருவருமே வலுவானவர்கள். சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். இருவரும் வெவ்வேறு வகையில் ஆடுவார்கள். எனவே அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு முறை களம் இறங்கும் போது புதுப்புது வியூகங்களை தீட்ட வேண்டி உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்