டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; சாய்னா, ஸ்ரீகாந்த் அரை இறுதிக்கு முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் அரை இறுதி போட்டிக்கு சாய்னா நேவால் மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் முன்னேறினர்.

Update: 2018-10-20 13:02 GMT
ஓடென்ஸ்,

டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் காலிறுதி போட்டியில் விளையாடினார்.

இதில் முதல் செட்டை ஒகுஹராவிடம் பறிகொடுத்த நேவால் மீண்டு வந்து அடுத்த 2 செட்களிலும் கவனமுடன் விளையாடி தனது ஆதிக்கத்தினை செலுத்தி போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

இந்த போட்டியில் 21-17, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை நேவால் வீழ்த்தினார்.  இந்த போட்டி 58 நிமிடங்கள் நீடித்தது.

இதேபோன்று மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மாவுடன் விளையாடினார்.  இதில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை கைப்பற்றினார்.  ஆனால் 2வது செட்டில் 16-16க்கு என்ற புள்ளி கணக்கிற்கு கொண்டு வந்து பின் அந்த செட்டை தன்வசப்படுத்தினார் சமீர்.

அதன்பின்னர் போட்டியின் இறுதியில், சமீர் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், ஸ்ரீகாந்த் முதலில் போட்டியை 18-18 என்று சமன் செய்து பின்னர் 3வது செட்டை கைப்பற்றினார்.  இதனால் அரை இறுதிக்கு ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார்.

மேலும் செய்திகள்