துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு சென்னையில் வரவேற்பு

உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு சென்னையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-09-04 00:04 GMT
ஆலந்தூர்,

பிரேசிலில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ‘தங்க மங்கை’ இளவேனில் நேற்று சென்னை திரும்பினார். அவரது தந்தை மற்றும் தாயார் குஜராத்தில் இருப்பதால் இளவேனிலின் உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் இளவேனில் கூறுகையில், ‘தங்கப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாதனைக்கு பிறகு விளையாட்டுத் துறையில் நிறைய பேர் வருவார்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தில் விளையாட்டுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவேன். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு தொடர்ந்து முயற்சிப்பேன்’ என்றார். 20 வயதான இளவேனில் கடலூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று வெளியிடப்பட்ட பெண்களுக்கான ஏர் ரைபிள் தரவரிசையில் இளவேனில் 16-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டிலா முதலிடத்திலும், அஞ்சும் மோட்ஜில் 2-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

மேலும் செய்திகள்