பார்முலா 1 கார்பந்தயம்: அஜர்பைஜான் சுற்று போட்டி தள்ளிவைப்பு

பார்முலா 1 கார்பந்தயத்தின் அஜர்பைஜான் சுற்று போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-23 23:58 GMT
பாகு,

இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் 22 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 15-ந் தேதி மெல்போர்னில் நடக்க இருந்த முதலாவது சுற்றான ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரி போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 7-ந் தேதி பாகுவில் நடக்க இருந்த 8-வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் எதிரொலியால் பக்ரைன், வியட்நாம், சீனா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய கிராண்ட்பிரி போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், மொனோக்கா கிராண்ட்பிரி போட்டி ரத்து செய்யப்பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய தடகள போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பாட்டியாலாவில் நடக்க இருந்தது. கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்த போட்டி தள்ளி வைக்கப்படுவதாக இந்திய தடகள சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

மேலும் செய்திகள்