ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் - அபினவ் பிந்த்ரா நம்பிக்கை

ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் என்று அபினவ் பிந்த்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-13 22:45 GMT
புதுடெல்லி, 

இந்திய ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்த நாள் வரைக்கும் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே வீரர் அபினவ் பிந்த்ரா தான். 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் அவர் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி வரலாறு படைத்தார். 37 வயதான பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டு மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் போது, தனிநபர் பிரிவில் தங்கம்பதக்கம் வென்ற ஒரே இந்தியராக இனியும் நான் தொடரமாட்டேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அதற்குள் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோய்விட்டது. ஆனாலும் எதிர்காலத்தில் நாம் தனிநபர் பிரிவில் மேலும் தங்கப்பதக்கங்கள் நிச்சயம் வெல்வோம் என்று கருதுகிறேன். நம் நாட்டில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இளைஞர்கள் அசத்தி வருகிறார்கள். அதே உத்வேகத்துடன் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் மீது கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

மேலும் செய்திகள்