“மங்காத்தா” ரீ-ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள் - இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி
15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மங்காத்தா’ படம் இன்று ரீ ரிலீஸானது.;
சென்னை,
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மங்காத்தா’. அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘மங்காத்தா’ அமைந்து இருந்தது.
இப்படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் . திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு ‘மங்காத்தா’ படம் பெரும் 'கம்பேக்'காக அமைந்தது. கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் ‘மங்காத்தா’.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. ‘மங்காத்தா’ படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தியேட்டர்களில் படத்தை பார்க்க குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளங்களுடன் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மகத், வைபவ் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் ‘மங்காத்தா’ படத்தை பார்த்தனர்.
இந்நிலையில், ‘மங்காத்தா’ படம் ரீ-ரிலீஸான நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இது ஒரு ரீ-ரிலீஸ் போல் இல்லை. அதே 2011 வைப் . மங்காத்தாவிற்கும், அஜித்துக்கும் நீங்கள் பொழியும் அன்பிற்கு நன்றி. 60% பேர் இப்படத்தை முதல்முறையாக திரையரங்கில் பார்க்கின்றனர். அனைவரும் சென்று என்ஜாய் பண்ணுங்க” என்று கூறியுள்ளார்.