என் கணவரின் படம் கடுமையாக விமர்சிக்கப்படுவது அநீதியாக உள்ளது! - நடிகை ஜோதிகா
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா கங்குவா படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.;
சென்னை,
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் உலகம் முழுவதும் கங்குவா வெளியானது. சிவா இயக்கிய இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை, கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதில், அதீத சத்தம், 3 டி காட்சிகள் , நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, கங்குவா படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது, "கங்குவா படத்தில் ஒரு சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். எனினும், சில மோசமானப் படங்களைவிட கடுமையான விமர்சனங்களை அந்தப் படம் சந்தித்ததைப் பார்த்தபோது அது என்னைப் பாதித்தது. ஊடகங்கள் பாரபட்சமாக நடந்துகொள்வது வருத்தமாக இருந்தது. இருப்பினும், என் கணவரின் படம் கடுமையாக விமர்சிக்கப்படுவது அநீதியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.