காதலனின் பாலியல் தொல்லையால் கன்னட நடிகையின் உறவுக்கார பெண் தற்கொலை
நடிகை ஆஷிகா ரங்கநாத்தின் உறவுக்கார பெண் தற்கொலை செய்து கொண்டார்.;
பெங்களூரு,
பிரபல கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத். இவரது தாய்மாமாவின் மகள் அச்சல் (வயது 22). ஹாசனை சேர்ந்த இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலைக்காக பெங்களூரு பாண்டுரங்க நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில் அச்சலும் அவரது தூரத்து உறவினரான மயங்க் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். மயங்க் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். மேலும் மயங்க், அச்சலுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மயங்கின் பாலியல் அத்துமீறல் அதிகமானதால், அச்சல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். ஆனாலும் மயங்க் விடாமல் செல்போனில் தொடர்புகொண்டு அச்சலுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதற்கிடையே மயங்க் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது அச்சலுக்கு தெரியவந்தது. இதனால் மேலும் மனமுடைந்த அச்சல், பெங்களூருவில் தனது உறவினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அச்சலின் பெற்றோர் தங்கள் மகள் சாவுக்கு மயங்க் மற்றும் அவரது தாய் மைனா தான் காரணம் என புட்டேனஹள்ளி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.