நான் யாரென உணர வைத்தது கெனிஷா - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தன் தோழி கெனிஷா குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மோகன்-கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் 'புரோ கோட்' படத்தை ரவிமோகனின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம். இவர்களின் விவாகரத்து பிரச்சனையில் முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்தமையால் பெரும் சர்ச்சை கிளம்பியது. ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் சமீபத்தில் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர்.
நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில், ரவி மோகனின் தோழி கெனிஷா, நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ரவி மோகனும், கெனிஷாவும் இன்று சென்னை வருவதற்கு முன் தயாரிப்பு நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் நிகழ்வில் பேசிய ரவி மோகன், “இந்த நிகழ்வு நடக்க ஒரே காரணம் கெனிஷாதான். இவ்வளவு பேர் வருவார்கள் எனத் தெரியாது. நான் யாரென எனக்கு உணர வைத்தவர். எனக்குக் கடவுள் கொடுத்த வரம் கெனிஷா. இவரைப் போன்ற ஒருவர் அனைவரின் வாழ்விலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” எனக் கூறினார்.ரவி மோகன் துவங்கிய தயாரிப்பு நிறுவனத்தில் கெனிஷாவும் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.