பிரம்மோற்சவ விழா: நாகூா் நாகநாதசுவாமி கோவிலில் தேரோட்டம்

நாகூா் நாகநாதசுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.;

Update:2025-07-09 12:08 IST

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோவில் உள்ளது. மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்ற தலமாகவும், காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

நேற்று காலை ஸ்ரீதியாகராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்ச்சியாக, கைலாய வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், அதைத் தொடா்ந்து ஸ்ரீதியாகராஜப் பெருமான் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. காலை சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் நகர்மன்ற துணை தலைவர் செந்தில்குமார், அறநிலையத் துறை துணை ஆணையர் ராணி, செயல் அலுவலர் கார்த்திகேசன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்