மதுரை: பொதும்பு கிராமத்தில் விநாயகர், விஷ்ணு துர்க்கை கோவில் கும்பாபிஷேக விழா
அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ருணம் தீர்த்த விநாயகர், விஷ்ணு துர்க்கை திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு நாட்களாக சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜையில் மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட 16 வகை சிறப்பு ஹோமங்கள் அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
யாக சாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் நிரப்பப்பட்ட குடத்தை கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் சுவாமி சிலைகள் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.