நவராத்திரி விழா தொடக்கம்: வீடுகளில் கொலு வைத்து மக்கள் வழிபாடு
இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டம் அக்டோபர் 1-ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நிறைவடைகிறது.;
நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். இந்த கொலுவில் பல்வேறு விதமான கடவுள் பொம்மைகளை வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள். நவராத்திரி விழாவில் சக்தியின் வடிவமாக உள்ள துர்க்கை, லட்சுமி, சரசுவதி ஆகிய தெய்வங்களுக்கு விஷேச பூசைகள் செய்து வழிபாடு செய்வார்கள். வீடுகளில் தினமும் மாலையில் விளக்கேற்றி, உறவினர்களுடன் தேவியின் பாடல்களை பாடுதல், பக்திப் பாடல்களை பாடுவதும், புராணங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி விழா தொடங்கி உள்ள நிலையில், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கொண்டாட்டம் தொடங்கியது. வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுபவர்கள், விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து வழிபாட்டை தொடங்கி உள்ளனர். சிலர் நவராத்திரி விழா தொடங்குவதற்கு முந்தைய நாளான மகாளய அமாவாசை நாளிலேயே கொலு பொம்மைகளை அடுக்க துவங்கினர். சிலர் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மூன்று நாட்களுக்கு முன்பே கொலு பொம்மைகளை அடுக்க துவங்கினர். ஒற்றைப்படை எண்ணிக்கையில் கொலு படிகள் அமைத்து, அதில் பல்வேறு கடவுள் மற்றும் பொம்மைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டம் அக்டோபர் 1-ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நிறைவடைகிறது. அக்டோபர் 2ம் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது.