தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update:2025-09-14 12:43 IST

சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர்

தேய்பிறை அஷ்டமியை யொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அறங்காவலர் குழு தலைவர் அறங்காவலர் உறுப்பினர் சார்பாக நீர் மோர், இளநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்ம வாகன காலசம்ஹார பைரவருக்கு திரவியப்பொடி, மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

 

சிறப்பு அலங்காரத்தில் சிம்மவாகன கால சம்ஹார பைரவர் 

நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள அஷ்ட பைரவர், வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்