திருவண்ணாமலை தீபத்திருவிழா: நாளை மறுநாள் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.;

Update:2025-09-22 12:17 IST

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 10-ம் நாள் அதிகாலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  டிசம்பர் மாதம் 3-ந்தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அப்போது கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.

மேலும் பந்தக்காலுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பந்தக்காலை ராஜகோபுரம் வரை சுமந்து வந்து அங்கு வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்படும். அதன் பின்னர் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான அனைத்து பணிகளும் தொடங்கும்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், இணை ஆணையர் பரணிதரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்