திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
திருச்செந்தூரில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடக்கிறது.;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
8 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில், பிரம்மா அம்சமாக வீதி உலா வந்தார். பின்னர் மேலக்கோவிலுக்கு வந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார மகா தீபாராதனை நடந்தது.
பகல் 1.15 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில், பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி, பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பெருமாள் அம்சமாக 8 வீதிகளிலும் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10-ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்கிறது.
அதேபோல் வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேரும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.