திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்.. அதிகாரிகள் ஆலோசனை
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்டம்பர் 28-ந்தேதி கருட சேவை, அக்டோபர் 2-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கின்றன.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருப்பதி தேவஸ்தானமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நேற்று மாலை திருமலை அன்னமய பவனில் ஆய்வுக் கூட்டம் நடத்தின.
கூட்டத்தில் கோவில் கைங்கர்யங்கள், வாகன சேவைகள், என்ஜினீயரிங் பணிகள், விடுதி வசதிகள், கல்யாணக் கட்டா, அன்னப்பிரசாதம், தூய்மைப்பணி, தோட்டக்கலைப்பிரிவு அலங்காரங்கள், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், காவல் உதவி மையங்கள், பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், தேவஸ்தானம் மற்றும் அரசு போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிட ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் பேசியதாவது:-
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு செப்டம்பர் 24-ந்தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றும் நிகழ்ச்சியின்போது பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்டம்பர் 28-ந்தேதி கருடசேவை, அக்டோபர் 2-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கின்றன. இந்த முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அலிபிரி சோதனைச் சாவடி பகுதியில் வாகனப் போக்குவரத்தை கண்காணிக்க தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பக்தர்கள் அனைவரும் அரசு பஸ்களில் பயணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கோவில், கேலரிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். திருமலையில் வாகன நிறுத்துமிடங்களை தேர்வு செய்து, போக்குவரத்துச் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கலெக்டர் வெங்கடேஸ்வர், போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷவர்தன் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.