வாழை தோட்டத்துக்குள் 45 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்
45 வயதான பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா ஜவகல் போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கடந்த 15-ந்தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜவகல் போலீசார் விரைந்து சென்று, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், 45 வயதான அவரை யாரோ கொன்று உடலை வாழை தோட்டத்துக்குள் வீசியதும் தெரியவந்தது. இதுகுறித்து ஜவகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி கொலையான பெண்ணும், அவரது பக்கத்து வீட்ைட சேர்ந்த 17 வயது சிறுவனும் சண்டை போடுவதை ஒருவர் பார்த்துள்ளார். இதுபற்றி அவர் போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், சிறுவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த சிறுவன், பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக் கொண்டான். மேலும் அவனிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 45 வயதான அந்த பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். விவசாய கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி, ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
அந்த வீட்டுக்கு செல்லும் இந்த பெண், குழந்தையை அன்பும், பாசமும் காட்டி வளர்த்து வந்தார். தனது சொந்த மகனை போல நினைத்து அந்த குழந்தை மீது மிகுந்த அன்பு காட்டினார். அந்த சிறுவன் வளர்ந்த பிறகு அவனை பள்ளிக்கு அனுப்புவது, தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்டவற்றை தாய் அந்தஸ்தில் இருந்து அந்த பெண் செய்து வந்தார்.
ஆனால் அந்த சிறுவன், தாய் போல் அன்பு காட்டிய பெண்ணை வேறு கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளான். இந்த நிலையில்தான் கடந்த 15-ந்தேதி பக்கத்து கிராமத்துக்கு வாழை தோட்டத்துக்கு பெண் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுவன், ஆட்கள் யாரும் இல்லாததை கவனித்து அந்த பெண்ணிடம் காம இச்சையை தீர்க்க முயன்றுள்ளான்.
மகனை போல நினைத்து வளர்த்தவன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் அதிர்ச்சி அடைந்த பெண், அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். ஆனாலும் அந்த சிறுவன், பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது கத்தி கூச்சலிட்ட அவனை சரமாரியாக தாக்கியதுடன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவனை போலீசார் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.