வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.;

Update:2025-12-12 22:35 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுன் இலகிநகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது குடும்பத்தை சோ்ந்த அனைவரும் அஜ்மீருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். இதனால் முபாரக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை மர்மநபர்கள் அறிந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னா் அவர்கள் முபாரக்கை கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரது கை, கால்களை கட்டி போட்டனர். மேலும் அவர் கத்தாமல் இருக்க வாயில் துணியை வைத்து அமுக்கி உள்ளனர்.

இதையடுத்து அவர்கள் முபாரக் அணிந்திருந்த தங்க நகைகள், வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் சென்ற பிறகு ஊர்ந்து, ஊர்ந்து கதவு அருகே வந்து முபாரக், கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினா் முபாரக்கின் வீட்டுக்கு வந்தனர்.

அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, முபாரக் கை, கால்கள் கட்டப்பட்டதுடன், வாயில் துணி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் முபாரக்கை மீட்டனர்.

இதையடுத்து முபாரக் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிட்லகட்டா டவுன் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சிட்லகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்