காஷ்மீரில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை; பயங்கரவாதிகள் பதுக்கி வைத்த வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு
காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்த வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;
Image Courtesy : ANI
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பல்னோய் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவத்தின் 'ரோமியோ' படைப் பிரிவு அதிகாரிகள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சமீபத்தில் குல்மார்க், பராமுல்லா உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்களை கண்டறிய இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்களை ராணுவத்தினர் கண்டெடுத்தனர். இதன்படி 2 கையெறி குண்டுகள் மற்றும் 3 கண்ணிவெடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல் காஷ்மீரில் உள்ள தங்மார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ராணுவ அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.