லடாக்கில் பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு
லடாக்கில் பாஜக அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.;
லடாக்,
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதேபோல் அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது.
இந்த போராட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் (அக்டோபர் ) 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.