அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.;

Update:2025-08-23 13:49 IST

புதுடெல்லி,

இந்திய பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரரும், பிரபல தொழில் அதிபருமானவர் அனில் அம்பானி. இவருடைய ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை யெஸ் வங்கியிடம் வாங்கிய கடனில் ரூ.3 ஆயிரம் கோடியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பிரதிபலனாக யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

எனவே லஞ்சம் விவகாரம், வங்கி கடன் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இது தொடர்பாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் டெல்லி அமலாக்கத்துறையினர் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் குழும அலுவலகங்கள், அதிகாரிகள் தொடர்புடைய 35-க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடத்தினர். 3 நாட்கள் இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையின்போது முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல மேலும் சில வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்த கடன் தொகை போலி நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. இவ்வாறு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வங்கி கடன் பணத்தை முறைகேடு செய்தது தொடர்பாக கடந்த 5-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி, அமலாக்கத்துறை சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகினார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திர். விசாரணையின்போது வங்கி கடன், நிதி முறைகேடு தொடர்பான அவரின் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அந்த நிறுவனத்துக்கும் அதன் இயக்குநர் அனில் அம்பானிக்கும் சொந்தமான இடங்களில் இன்று சோதனை மேற்கொண்டு வருகிறது. டெல்லியிலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவினர், மும்பையில் உள்ள அனில் அம்பானியின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். சிபிஐ சோதனையின்போது அனில் அம்பானி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்