டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
60 விமானங்களின் புறப்பாடு மற்றும் 58 விமானங்களின் வருகை ரத்துசெய்யப்பட்டன.;
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடும் குளிர், பனி மற்றும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலையிலேயே பனி படர்ந்து தெளிவற்ற வானிலை நிலவியது. டெல்லி நகரின் பல்வேறு பகுதிகள் பனிப்போர்வை போர்த்தியது போன்று உள்ளது. பகல் நேரத்திலும் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றன. கடந்த சில நாட்களாக டெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. சில சமயங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இன்று மொத்தமாக 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 60 விமானங்களின் புறப்பாடு மற்றும் 58 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் விமான சேவை ரத்துசெய்யப்பட்டன. வானிலை சற்று சீரான பிறகு படிப்படியாக விமான சேவைகள் இயக்கப்படும் என டெல்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.