மராட்டிய மாநகராட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள்

கடந்த 23-ந் தேதியில் இருந்து வெறும் 44 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.;

Update:2025-12-30 03:14 IST

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் அரசியல் களம் அடிக்கடி மாறி வருகிறது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 2-வது கட்டமாக புனே, பிம்ப்ரிசிஞ்சவட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும்.

கடந்த ஒரு வாரமாக கூட்டணி பேச்சுவார்தைகள் மற்றும் வார்டு பங்கீட்டில் ஒற்றுமையின்மை உள்ளிட்ட காரணங்களால் மந்தமாக இருந்த மனு தாக்கல், வார்டு பங்கீடு ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட இறுதியானதை தொடர்ந்து நேற்று முதல் வேகம் எடுத்துள்ளது.

மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக 23 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மனு தாக்கல் தொடங்கிய கடந்த 23-ந் தேதியில் இருந்து வெறும் 44 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் நேற்று ஒரே நாளில் 357 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை 401-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஆயிரக்கணக்கானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலக வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரமாண்ட ஊர்வலங்களுடன் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்