எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 தடவை பெட்டிகள் கழன்று ஓடியதால் பரபரப்பு; பயணிகள் அலறல்
மும்பையில் இருந்து அமிர்தசரஸ் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 தடவை ரெயில் பெட்டிகள் கழன்று தனியாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது;
மும்பை,
மும்பை பாந்திரா டெர்மினலில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி பச்சிம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12925) நேற்று காலை 11.30 மணியளவில் புறப்பட்டது. அந்த ரெயில் போரிவிலியை கடந்து மதியம் 1.19 மணியளவில் வான்காவ்–தகானு ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, திடீரென ரெயிலின் கடைசி 2 பெட்டிகளின் இணைப்பு உடைந்தது. இதனால் 2 பெட்டிகள் தனியாக கழன்று சென்றன. இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர்.இதுபற்றி அறிந்த எஞ்சின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ரெயிலில் இருந்து பிரிந்த பெட்டிகளை மீண்டும் இணைத்தனர். பெட்டிகள் இணைக்கப்பட்ட பின்னர், சுமார் அரை மணி நேரம் கழித்து எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதியம் 2.10 மணியளவில், ரெயில் வாபி அருகே சஞ்சன் ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது, அந்த 2 பெட்டிகள் மீண்டும் கழன்று சென்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் நிறுத்தப்பட்டது.ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு பணிகள் முடிந்ததையடுத்து, அந்த ரெயில் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டது. 2 முறை ரெயில் பெட்டிகள் பிரிந்ததால் சுமார் 3 மணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர்.இந்தச் சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும், ரெயில் பெட்டிகள் 2 முறை கழன்றதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.