பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல்; 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது;

Update:2025-11-06 04:15 IST

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் 6-ந் தேதி (இன்று), 11-ந் தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது. 121 சட்டசபை தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. கடந்த சில நாட்களாக பரபரப்பாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர்.மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர்.

வேட்பாளர்களில் இந்தியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் (ரகோபூர் தொகுதி), அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ் (மஹுவா) மற்றும் துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி (தாராபூர்), விஜய்குமார் சின்ஹா (லக்கிசாரை) உள்பட 16 மந்திரிகள் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.மொத்தம் 45 ஆயிரத்து 341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

முதல்கட்ட தேர்தலையொட்டி, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 1,650 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய கட்டிடங்களிலும் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள் மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றப்பின்னணி கொண்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் டி.ஜி.பி. வினய்குமார் தெரிவித்தார். 348 பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்