நாட்டில் முதன்முறையாக... 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்கள்: கெஜ்ரிவால் பெருமிதம்
ஆக்கி, கிரிக்கெட், வாலிபால் மற்றும் பிற விளையாட்டுகளுக்காக 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்கள் கட்டப்பட்டு வருகின்றன.;
சண்டிகார்,
பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் முதன்முறையாக கிராமங்களில் விளையாட்டு திடல்களை கட்டும் பணியை பஞ்சாப் அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, பஞ்சாப்பின் பதிண்டா நகரில் 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்களை தொடங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பேசினார்.
அப்போது அவர், இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, எந்த அரசும் தன்னுடைய குடிமக்களுக்காக கிராமங்களில் விளையாட்டு திடல்களை கட்டியதில்லை. ஆக்கி, கிரிக்கெட், வாலிபால் மற்றும் பிற விளையாட்டுகளுக்காக 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
ஆம் ஆத்மியின் இளைஞர் கிளப் உறுப்பினர்கள் இந்த விளையாட்டு திடல்களின் கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்வார்கள். இதன்பின்னர், மாநில அரசு வழங்க கூடிய விளையாட்டு சாதனங்களின் பாதுகாப்பையும் அவர்கள் உறுதி செய்வார்கள் என பேசியுள்ளார்.