அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் - சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

தேர்தல் அறிவிப்பின்போது அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.;

Update:2025-02-12 19:44 IST

புதுடெல்லி,

நகர்ப்புறங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்கான உரிமை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி ஆர் கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் இன்று விசாரணைக்கு வந்தது.

இதில், தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இலவசங்கள் வழங்குவதால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை. அவர்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது. எந்த வேலையும் செய்யாமல் பணம் கிடைக்கின்றது. மக்கள் மீதான உங்கள் அக்கறையை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். ஆனால் இந்த மக்களை பிரதான சமூகத்தின் ஒரு பகுதியாக மாற்றாமல், நாம் ஒரு வகையான ஒட்டுண்ணிகளை உருவாக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினர். நகர்ப்புறங்களில் வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்குவது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டப் பணியை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சட்ட ஆலோசகர் ஆர். வெங்கடரமணி நீதிபதிகள் அமர்வின் முன் தெரிவித்தார்.

இந்த நிலையில், நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டம் எப்போது தொடங்கும் என்பது குறித்து அரசாங்கத்திடம் ஆலோசிக்குமாறு நீதிபதிகள் சட்ட ஆலோசகரிடம் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்