கேரளா: கோவில் திருவிழாவில் யானைகள் ஓடியதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு
கோவில் திருவிழாவில் யானைகள் ஓடியதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 13ம் தேதி மாலை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் நெற்றி பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
அப்போது வளர்ப்பு யானைகளான கோகுல், பீதாம்பரம் இடையே திடீரென ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதனால் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்வதறியாது திகைத்தனர். யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றனர். இருப்பினும் யானைகள் கடுமையாக மோதிக்கொண்டன.
யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில், யானைகளுக்கு இடையே சிக்கி கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த லீலா (வயது65), அம்மு குட்டியம்மா (70), ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள அரசு இன்று அறிவித்துள்ளது.