குடும்ப தகராறால் மார்க்கெட்டில் வைத்து மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்
மனைவியை கொலை செய்ததற்காக கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்று விஸ்வகர்மா போலீசாரிடம் கூறியுள்ளார்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் விஸ்வகர்மா சவுகான்(34). இவரது மனைவி மம்தா சவுகான்(32). இந்த தம்பதிக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இதனிடையே, குடும்ப தகராறு காரணமாக மம்தா, கணவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
மேலும், விவாகரத்து கோரி மம்தா மனு தாக்கல் செய்திருந்ததாகவும், குழந்தையை கவனித்துக் கொள்ள பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காரணமாக நீண்ட நாட்களாக இவர்களுக்கு இடையே பிரச்சினை நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று மம்தா மார்க்கெட் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு அவரை விஸ்வகர்மா சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த விஸ்வகர்மா, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மம்தாவை சுட்டார்.
இதில் மம்தா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மம்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் விஸ்வகர்மா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மம்தா தனது பணத்தை அழித்துக்கொண்டிருந்தார் என்றும், அவரை கொலை செய்ததற்காக கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்றும் விஸ்வகர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.