இறந்தவர்களுடன் தேநீர் அருந்தினேன்; தேர்தல் ஆணையத்திற்கு நன்றி - ராகுல் காந்தி கிண்டல்

உயிரிழந்ததாக கூறி பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.;

Update:2025-08-13 19:07 IST

புதுடெல்லி,

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் சூழலில் அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டபோது 65 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு இருந்ததை கண்டறிந்து அவற்றை நீக்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது.

இந்த பிரச்சினையை நாடாளுமனற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்து பரபரப்பு புகார் தெரிவித்தார். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவில் பெருமளவில் முறைக்கேடு நடந்து உள்ளதாகவும் வாக்காளர் பட்டியல் குளறுபடி இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார். இதனை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது,

இந்தநிலையில், தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்கள் என்று கூறி பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல்காந்தி சந்தித்து பேசி உள்ளார் .

இதுபற்றி அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் ஆர்ஜேடி கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் ரகோபூர் தொகுதியைச் சேர்ந்த ரமிக்பால் ரே, ஹரேந்திர ரே, லால்முனி தேவி, வச்சியா தேவி, லால்வதி தேவி, பூனம் குமாரி, முன்னா குமார் ஆகியோர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான ஆவணங்களை பூர்த்தி செய்து அளித்திருந்தும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்