ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் எடையில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தது இந்தியா
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400 தாண்டியது.;
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் குனார். பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த மாகாணத்தில் தொடர்ந்து பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது. இது நங்கர்ஹார் மாகாணம் நுலாலாபாத்தை மையமாக கொண்டு உருவானது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியாவிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
இதற்கிடையே மலை பிரதேசமான குனார் மாகாணத்தின் பல கிராமங்களில் உள்ள வீடுகள் மண்ணால் கட்டப்பட்டு இருந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டபோது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.நள்ளிரவு நேரம் என்பதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் உயிருடன் புதையுண்டனர். இதனையடுத்து அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 1400-ஐ தாண்டியது.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு உதவுவதாக இந்தியா அறிவித்தது. அதன்படி அந்நாட்டுக்கு 21 டன் எடையில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் பதிவில் கூறியதாவது:-
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. காபூலுக்கு வான் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. மருந்து பொருட்கள், போர்வைகள், சக்கர நாற்காலிகள்,சானிடைசர்கள்,ஜெனரேட்டர்கள், சமையலறை பாத்திரங்கள், என விமானம் மூலம் 21 டன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள நிலைமையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் நிவாரண பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்படும் என அதில் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.