திருப்பதி பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் - மாணவர்கள் அச்சம்
3 நாட்களாக பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சிறுத்தை திரிந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.;
திருப்பதி,
திருப்பதியில் திருமலை தேவஸ்தானம் நிதியுதவியுடன் ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம் வேதங்கள் மற்றும் அது தொடர்பான அறிவை பரப்ப நிறுவப்பட்டது.
இந்த நிலையில் இந்த பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று இரைதேடி சுற்றித் திரிந்துள்ளது. இதனை பல்கலைக்கழக காவலாளி ஒருவர் தனது செல்போனில் படம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 3 நாட்களாக பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் அந்த சிறுத்தை திரிந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவர்களும், பணியாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.